கர்ப்ப கால சர்க்கரை நோய் – அறிகுறிகள் மற்றும் தீர்வு

கர்ப்ப காலம் முழுவதும் பல்வேறு பரிசோதனைகள் எடுக்க சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பாங்க. அதுல குறிப்பாக கர்ப்ப கால சர்க்கரை பரிசோதனை. சர்க்கரை நோய் என்பது இன்று சாதரணமாக இருக்கக்கூடிய பொதுவான நோயாக தோன்றினாலும், கர்ப்ப காலத்தில் வருகிற சர்க்கரை நோய் என்பது அதிக கவனத்தோடு அணுக வேண்டியது. கர்ப்ப கால சர்க்கரை நோய் பற்றி அறிய வேண்டிய அனைத்து விஷயங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
கர்ப்ப கால சார்க்கரை நோய் என்றால் என்ன?
சாதரணமாக, சாப்பிட்ட பிறகு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 160-மில்லி கிராமைத் தாண்டாமல் இருக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு 140 மில்லி கிராம் இருந்தாலே சர்க்கரை நோய் இருக்கலாம் என்று சொல்கிறது ஆங்கில மருத்துவம். அதன் பிறகு குளுக்கோஸ் 'டாலரன்ஸ் டெஸ்ட்' என்ற குளுக்கோஸ் சோதனை செய்து உங்கள் இரத்த சர்க்கரை அளவை சோதனை செய்ய வேண்டும். கர்ப்பமாகி முதல் மூன்று மாதம் முதல் ஒன்பது மாதம் வரை மூன்று தடவையாவது இந்த பரிசோதனையை எடுக்க சொல்வார்கள்.
அறிகுறிகள்
கர்ப்ப கால சர்க்கரை நோயின் அறிகுறிகள் மிகவும் நுட்பமானவை என்பதால் அறிய முடியாமல் போகும் வாய்ப்பு உண்டு. ஏற்கனவே கர்ப்பத்தின் பிற மாற்றங்கள் உடலில் தெரிவதால் இதனை அடையாளம் காண முடியாமல் போகலாம். எனினும் பின் வரும் அறிகுறிகளை கவனத்தில் கொள்ளுங்கள். ஆனால் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் இதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- வழக்கத்திற்கு மாறாக அதிகமாக தாகம் எடுப்பது
- அடிக்கடி சோர்வு
- குமட்டல்
- பசியின்மை
- நான்கு மாதம் கழித்தும் தொடர்ந்து சர்க்கரையின் அளவு கூடுதல்
கர்ப்ப கால சர்க்கரை நோயின் வகைகள்
ஏன் கர்ப்ப காலத்தில் இவ்வளவு பரிசோதனைகள் எடுக்க சொல்கிறார்கள் என்று நிறைய பேர் நினைத்திருப்போம். காரணம் இருக்கின்றது. நம்முடைய உடல் நலப் பிரச்சனையோ அல்லது குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை இருந்தாலோ அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதற்காக தான் இத்தனை பரிசோதனைகள்.
முக்கியமாக கர்ப்ப கால சர்க்கரை நோயின் வகைகளை டைப் 1, டைப் 2 என இரண்டாக பிரிக்கிறார்கள். 30 வயதுக்கு மேல் கர்ப்பமடைதல், உடல் பருமன், ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தாலோ, மன அழுத்தம், ஸ்டீராய்டு உட்கொண்டிருந்தாலோ, மரபணு மூலமாகவோ, வாழ்க்கைமுறை மாற்றம் என பல காரணிகளால் கர்ப்ப கால சர்க்கரை நோய் வருகின்றது.
கர்ப்ப கால சர்க்கரை நோயின் விளைவுகள்
பொதுவாகவே கர்ப்ப காலத்தில் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும். அவை புரொஜெஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜென், நஞ்சுக்கொடி ஹார்மோன் என அழைக்கப்படும் `ஹியூமன் பிளேசென்டால் லாக்டோஜென்' (Human Placental Lactogen) என னைத்தும் இன்சுலினுக்கு எதிராக வேலைசெய்யும் தன்மை உடையவை. இதை ஈடுகட்டுவதற்காக இயல்பாகவே கர்ப்பிணிகளின் உடலில் இன்சுலின் சற்று அதிகமாக உற்பத்தியாக தொடங்கும்.
ஆனால் கர்ப்பிணிகளில் ஒருசிலருக்கு, அதிலும் குறிப்பாக அதிக உடல்பருமன், குடும்பத்தில் ஏற்கெனவே சர்க்கரை நோயுள்ளவர்கள், பிசிஓடி (PCOD) பிரச்சனை இருப்பவர்களுக்கு தேவையான அளவு இன்சுலின் சுரக்காததால், அவர்களுக்கு இந்த கர்ப்பகாலத்தில் மட்டும் சர்க்கரைநோய் வருகிறது. இதையே `கர்ப்பகால சர்க்கரைநோய்' என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கர்ப்ப காலத்தில் இன்சுலின் குறைவாக சுரப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கின்றது. இதன் மூலம் தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தையை பாதிக்கின்றது. கருச்சிதைவு, பிறவி ஊனம், குறைமாத பிரசவம், அதிக எடையுள்ள குழந்தை பிறப்பு, குழந்தை பிறந்தவுடன் அதன் ரத்த சர்க்கரை அளவும், கால்சியம் அளவும் குறையும். குழந்தைக்கு இருதய துடிப்பு, நுரையீரல் பிரச்னைகள் ஏற்படலாம். வயிற்றிலேயே குழந்தை இறக்கும் வாய்ப்பு உண்டு.
கர்ப்ப கால சர்க்கரை நோய்க்கான தீர்வுகள்
நிச்சயமாக தீர்வுகள் இருக்கின்றது. சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைப்பது என்பது முதன்மையாக செய்ய வேண்டியது. இதற்கு முக்கியமாக கர்ப்ப கால பரிசோதனைகள், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் பின்பற்ற வேண்டும்.
பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை
குளூக்கோஸ் பரிசோதனை (GCT) – கர்ப்பிணிகள் ஒவ்வொருவரும் 75 கிராம் குளூக்கோஐ தண்ணீரிலிட்டு குடித்த இரண்டு மணி நேரம் கழித்து அவர்களது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துப் பார்ப்பார்கள். கர்ப்பம் உறுதியான பிறகு 2 முறை அதாவது 4 ஆம் மாதமும், 8 ஆம் மாதமும் 3 முதல் 4 முறை இந்த பரிசோதனை செய்வார்கள். ஒருவேளை சர்க்கரையின் அளவு 140 கிராமுக்கு அதிகமாக இருந்தால் ஃபாஸ்டிங், உணவுக்குப் பின் ஹெச்பி.ஏ 1.சி (HbA1c) என அடுத்த நிலை பரிசோதனைகளுக்கு பரிந்துரைப்பார்கள். தேவைப்பட்டால் இன்சுலின் ஊசி மற்றும் பிற சிகிச்சை மூலம் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.
உணவுப்பழக்கம்
கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்களுடைய உணவுப்பழத்தை கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும். புரிகிறது உங்களுடைய வருத்தம், கர்ப்பிணிகளுக்கு சில உணவுகளை விரும்பி சாப்பிட ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த சூழ்நிலையில் தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காக இந்த உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றி தான் ஆக வேண்டும்.
கர்ப்ப கால சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவுப்பட்டியல் கீழே உள்ளது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
- காலை 6.00 - 7:00 மணி : ஒரு டம்ளர் பால் (நாட்டு சர்க்கரை கலந்து) அல்லது கிரீன் டீ (சர்க்கரை இல்லாமல்) கோதுமை ரஸ்க் மற்றும் ஊற வைத்த பாதாம் பருப்பு.
- காலை 9:00 மணி : இரண்டு அல்லது மூன்று தோசை, இட்லி, சப்பாத்தி ஏதவது ஒன்றை தேர்வு செய்யுங்கள். அல்லது புதினா சட்னியுடன் கோதுமை பிரட் சான்வென்ஜ் (ஜாம் இல்லாமல்), கோதுமை ரவா உப்புமா அல்லது ரவா உப்புமா. இதில் ஏதாவது ஒன்றோடு காய்கறி கலந்து சாப்பிடலாம்.தொட்டுக் கொள்ள தக்காளி, கொத்தமல்லி, பாசிப்பருப்பு சாம்பார் போன்றவற்றில் ஒன்றினை எடுத்துக்கொள்ளலாம். இரண்டு முட்டையின் வெள்ளைக் கரு மட்டும். காய்கறி 'சூப்'பில் ஒரு கிண்ணம்.
- காலை 11:00 மணி: கொய்யா, ஆப்பிள், மாதுளை பழங்களில் ஏதாவது ஒன்று அல்லது காய்கறி சாலட் ஒரு கிண்ணம் அல்லது ஊற வைத்து முளைகட்டிய ஏதாவது ஒரு பயறு வகையில் ஒரு கிண்ணம். காய்கறி சூப் அல்லது சர்க்கரை கலக்காத எலுமிச்சை அல்லது சாத்துக்குடி ஜூஸ்
- மதியம் 1.00 - 1:30 மணி : அரிசி சோறு ஒரு கப் (கைக்குத்தல் அரிசியாக இருக்கலாம்), இரண்டு சப்பாத்தி, காய்கறி அல்லது கீரை கலந்த பாசிப்பருப்பு கூட்டு, ஏதாவது ஒரு பொரியல், ஒரு கிண்ணம் தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று. அசைவ உணவு உண்பவர்கள் வாரம் இருமுறை கோழி, மீன் குழம்பு எடுத்து கொள்ளலாம். வறுத்ததை விட குழம்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.
- மாலை 4:30 மணி : வேக வைத்த பயிறு, சுண்டல், காய்கறி கலந்த அவல் உப்புமா, அல்லது வேர்க்கடலை, காய்கறி கலந்த உப்புமா அல்லது கோதுமை ரொட்டி ஆகியவற்றி ஏதாவது ஒன்று. டீ அல்லது பால் 1 டம்ளர்.
- இரவு 8:00 மணி : காய்கறி சேர்த்த மூன்று தானிய ரொட்டி அல்லது மூன்று சப்பாத்தி அல்லது தோசை.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
- பழங்களில் பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம், அன்னாசிப்பழம், சப்போட்டாவை தவிர்க்க வேண்டும்.
- காய்கறியில் உருளைக்கிழங்கு, சேணைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீட்ரூட்டை தவிர்ப்பது நல்லது.
- பழச்சாறு, சர்க்கரையை உடனடியாக அதிகரிப்பதால் அதனை தவிர்க்க வேண்டும்.
- கருப்பட்டி, வெல்லம், சீனி, வனஸ்பதி, ஐஸ்கிரீம், பேரிச்சம் பழம், எண்ணெயில் பொரித்த உணவுகள், குளிர்பானங்கள், தேன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி
தினமும் கண்டிப்பாக உங்களுடைய உடற்பயிற்சியில் நடைபயிற்சியை பின்பற்றுங்கள். உடல் சோர்வாக இருந்தாலும் வீட்டில் சின்ன சின்ன வேலைகளை செய்யலாம். இதுவும் ஒருவகையான உடற்பயிற்சி தான். மற்ற பயிற்சிகளை உங்கள் மகப்பேறு மருத்துவரின் அறிவுரைப்படி செய்து கொள்ளலாம்.
ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது மூலமாக கர்ப்ப கால சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க முடியும். சரியான நேரத்தில் பரிசோதனை, உணவுப்பழக்கம் மற்றும் தேவையான உடற்பயிற்சி ஆகியவற்றை பின்பற்றுவதன் இனிய பிரசவ காலமாக மாற்றலாம்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...