பாரம்பரிய தலை வாழை இலை சாப்பாடு - தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்

எல்லோருக்கும் ”இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14 ஆம் தேதி அனைத்து தமிழர்களாலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் நாள் தான் தமிழ் புத்தாண்டு. சித்திரை முதல் தேதி தமிழ் புத்தாண்டின் முதல் நாளாகும். இந்த நன்னாளை குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாட தயாராகிவிட்டீர்களா? தலை வாழை இலை சாப்பாடு இல்லாமல் புத்தாண்டா? வாங்க முக்கியமான வகைகள் என்ன? எப்படி செய்யனும்னு பார்க்கலாம்.
புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பம்
ஒவ்வொரு வீட்டிலும் இந்த நாள் கொண்டாட்டத்தை அவர்களின் வாசலில் போடும் வண்ணக் கோலத்திலிருந்து ஆரம்பிக்கிறது. பின்னர் வீட்டுப் பெண்கள் தங்கள் கடவுளுக்கு முன்னால் பலவிதமான பழங்கள், பூ, காய்கறி மற்றும் சுத்தமான அரிசியை வைத்து, வாழ்க்கைக்கு ஒரு புதிய தொடக்கமாக இருக்கும் நம்பிக்கையின் அடையாளமாக வணங்கப்படுகிறது. பின்னர் பெரியவர்களும், குழந்தைகளும் புதிய ஆடைகளை அணிந்து கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்கு விழா என்றாலே குதூகலம் தான். இந்த மாதிரி விழாக்கள் கொண்டாடும் போது குழந்தைகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புவார்கள். நம்முடைய பாரம்பரியத்தை குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல தரியான தருணங்கள் இதுவே.
குழந்தைகளை ஈடுபடுத்த உதவும் வழிகள்
- கோலம் போடும் போது குழந்தைகள் கையில் வண்ணப்பொடிகளை கொடுத்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வண்ணப் பொடிகளை நிரப்ப சொல்லலாம்.
- எப்போதும் கடைவீதீக்கு செல்வதற்கும் இந்த மாதிரி விழாக்களுக்காக பொருட்கள் வாங்க செல்வதற்கும் வித்தியாசம் உண்டு. குழந்தைகள் இயல்பாகவே நிறைய மகிழ்ச்சியாக கற்றுக் கொள்கிறார்கள்.அவர்களை கடைகளுக்கு அழைத்து செல்வதோடு இந்த பொருட்களை எல்லாம் எதற்காக வாங்குகிறோம், இதன் முக்கியத்துவம் என்ன? பாரம்பரியம் என்றால் என்ன? ஏன் இவ்வளவு வருடங்கள் இதை தொடர்ந்து கொண்டாடுகிறோம்?/ விவசாயிகள் யார்? அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் போன்ற பல விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்ல முடியும்.
- அடுத்தது முக்கியமானது விருந்து சாப்பாடு. வீட்டில் உள்ள பெரியவர்களோடு சேர்ந்து சாப்பிட குழந்தைகள் எப்போதுமே ஆசைப்படுவார்கள். குழந்தைகள் பல நேரங்களில் அவர்களுக்கு ஊட்டியோ அல்லது வேறு ஏதாவது ஒரு நேரத்திலோ தனியாகவே சாப்பிடுகிறார்கள். இந்த மாதிரி விழா நாட்களில் அவர்களுக்கும் ஒரு இலை போட்டு நம்மோடு உட்கார வைத்து சாப்பாடு பரிமாறும் போது அடடடா… அவர்கள் முகத்தில் எவ்வளவு சந்தோஷம்.
- நீங்க நல்ல கவனிச்சு பாருங்க.. குழந்தைகள் அன்றைக்கு அவர்களாகவே சாப்பிடுவதோடு நிறையவும் சாப்பிடுவார்கள். என் மகள் 6 வயது, அவளுக்கு இலையில் சாப்பிட மிகவும் பிடிக்கும். பெரியவர்கள் இலையில் இருக்கும் அத்தனை சாப்பாட்டு வகைகளும் அவள் இலையிலும் இருக்கும். வீணாக்கிடுவாங்க என்பதற்காக அவர்களுக்கு வைக்காமல் விட்டால் ரொம்ப வருத்தப்படுவாங்க. இன்னொரு சந்தர்ப்பத்தில் வீணாக்கக்கூடாது என்பதை சொல்லி கொடுத்துவிடலாம். இந்த இனிய தருணங்கள் அவர்கள் மனதில் மகிழ்ச்சியான நினைவுகளாக என்றைக்கும் இருக்கட்டுமே…
- உறவினர், நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூற சொல்லலாம். ஏற்கனவே கொரோனாவால் அனைவரும் சமூக தனிமையோடு அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம். அதனால் உடல் அளவில் தூரமாக இருப்போம். மனதளவில் அனைவருடனும் நெருங்கும் தினம் இது. குழந்தைகளை முடிந்தவரையில் நிறைய பேருக்கு வாழ்த்துக்களை பரிமாற ஊக்கப்படுத்துங்கள். மனதளவில் அவர்களுக்குள் இருக்கும் இறுக்கம் நிச்சயமாக நீங்கும்.
தலை வாழை இலை விருந்துக்கு தயாரா!
கொண்டாட்டம் இன்னும் கலைகட்டும் தருணம் இது. நம்முடைய முன்னோர்கள் காரணம் இல்லாமல் இதெல்லாம் செய்யவில்லை. ஒவ்வொரு உணவும் உங்கள் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தரும். மா, பலா, வாழை என முக்கனிகளோடு இடம்பெறும். இந்த மூன்று கனிகளும் கிடைக்கும் பருவ காலம் இது.
இந்த திருவிழாவின் போது செய்யப்படும் மிகவும் பொதுவான உணவுகள் “மங்கா பச்சடி” ஆகும், பாசிப்பருப்பு பாயாசம், பருப்பு வடை, வேப்பம் பூ ரசம் போன்ற பலவிதமான வகைகள் உண்டு. பல விதமான ருசியையும் இந்த நாளில் சுவைக்கலாம். இந்த சாப்பாட்டு பட்டியல் தமிழர்களின் பாரம்பரிய சமையலாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு பரிமாறக்கூடிய ஒரு சுவையான பெரிய விருந்துடன் கொண்டாடுகிறோம்.
- மாங்கா பச்சடி
- பூசணிக்காய் சாம்பார்:
- வேப்பம் பூ ரசம்
- அவியல் (காய்கறி கலவையுடன் செய்வது),
- உருளைக்கிழங்கு வறுத்தது,
- முட்டைகோஸ்-கேரட் பொரியல்
- பாசிப்பருப்பு பாயாசம்
- மசால் பருப்பு வடை
- அப்பளம் மற்றும் வடாம்
- சுண்டைக்காய் பொரித்தது, உப்பு
இதோ புத்தாண்டு ஸ்பெஷல் ரெஸிபி செய்முறைகள்
1. மாங்கா பச்சடி:
இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கரிப்பு, காரம் ஆகிய அறுசுவையும் ஒரு உணவில் கிடைக்கும் என்றால் அதுதான் நம்ம ஊரு மாங்கா பச்சடி. பச்சை மாம்பழம், வெல்லம், காஞ்ச மிளகாய் சேர்ந்து கலந்த சட்னிதான் மாங்கா பச்சடி.இது நம்ம ஊரு பாரம்பரிய உணவில் ஒன்று.
தேவையான பொருட்கள்:
- பச்சை மாங்காய் இரண்டு (தோல் சீவினது )
- ½ கப் வெல்லம்
- ¼ ஸ்பூன் தனிமிளகாய் தூள்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- சிறிது கருபேப்பில்லை
- 2 காஞ்ச மிளகாய்
செய்முறை:
- பச்சை மாம்பழத்தின் தோலை லேசாக தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும்
- ஒரு பாத்திரத்தில் பச்சை மாம்பழத்துடன் வெல்லம், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு 20 நிமிடம் வேக வைக்கவும்,அடிக்கடி கிளறி நன்கு வெந்தவுடன், மங்கா பச்சடி ஒரு ஜாம் போன்ற நிலைத்தன்மையைக் கொண்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள்.இப்போது அடுப்பை அணைக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்த நன்கு கலக்கிக் கொள்ளவும்
- மிதமான வெப்பத்தில் ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கவும்; இதில் கடுகு, சீரகம் மற்றும் காஞ்ச மிளகாய் சேர்த்து கிளறவும்.நன்கு பொரிந்தவுடன் இதில் கறிவேப்பிலை சேர்த்து கடைசியாக சமைத்த பச்சை மாம்பழ பச்சடியில் கலக்கவும்.
- நன்கு மசிந்த பிறகு ஒரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
2. பூசணிக்காய் சாம்பார்:
தமிழர் உணவில் ஒரு முக்கியமான வீட்டு உணவாக இருப்பது இந்த சாம்பார்.சம்பார் வைக்காத வீடே இருக்க முடியாது. சித்திரை மாதத்தில் பூசணிக்காய் அதிகமாக விளைவதால் இந்த காலகட்டத்தில் சிறந்த ஊட்டச்சத்தான உணவாகும்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் துவரம் பருப்பு (பாசிப்பருப்பு)
- 500 கிராம் மஞ்சள் பூசணிக்காய்
- 150 கிராம் சிறிய வெங்காயம் (சாம்பார் வெங்காயம்)
- 1-1/2 கப் புளி தண்ணீர்
- 2 தேக்கரண்டி சாம்பார் பவுடர்
- 1/2 தேக்கரண்டி வெல்லம் , விரும்பினால்
- உப்பு , சுவை
- சிறிது நறுக்கிய கொத்தமல்லி (தனியா) இலைகள்
தாளிப்பதற்கான பொருட்கள்
- கடுகு - 1 டீஸ்பூன்
- 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
- சிறிது கறிவேப்பிலை
- 2. உலர்ந்த சிவப்பு மிளகாய்
- சமையல் எண்ணெய், தாளிப்பதற்கான
செய்முறை
- முதலில் பருப்பை சமைத்து புளி தண்ணீரை தயார் செய்வோம்.
- துவரம் பருப்புடன் சிறிது வெள்ளை பூண்டு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும்
- வெந்த பருப்பை நன்கு மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்
- பிரஷர் குக்கரில், புளி நீர், வெங்காயம், மஞ்சள் பூசணி, உப்பு மற்றும் சாம்பார் தூள் சேர்க்கவும். பிரஷர் குக்கரை எடையுடன் மூடி வைக்கவும். 2 விசில்களுக்கு பிறகு அடுப்பை அணைக்கவும். பிரஸர் தானாகவே அடங்கும்வரை காத்திருக்கவும்.
- பிரஸர் வெளியானதும், குக்கரைத் திறந்து சமைத்த பருப்பை விட்டு கிளறவும். உப்பு மற்றும் சாம்பார் தூள் அளவை சரிபார்த்து, உங்கள் சுவைக்கு ஏற்ப சரிசெய்யவும்.
- சாம்பார் கலவையை நடுத்தர வெப்பத்தில் வைக்கவும்.
- ஒரு சிறிய வாணலியில் ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெயை சூடாக்கவும்; கடுகு மற்றும் காஞ்ச மிளகாய் சேர்தது லேசாக வறுக்கவும். வெப்பத்தை அணைத்து, பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை போட்டு கிளறவும்.
- இந்த சுவையூட்டும் கலவையை கொதிக்கும் சாம்பார் மீது ஊற்றி நன்கு கிளறி கொடுக்கவும்.
- வெப்பத்தை அணைத்து, மஞ்சல் பூசானிகாய் சாம்பரை பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றவும்.
கொரோனாவை வெல்லும் வேப்பம் பூ ரசம்
சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்தக் குலுங்குவதை காணலாம். இனிப்பும், கசப்பும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் வேப்பம்பூ ரசம் வைக்கப்படுகிறது. கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.
வேப்பம் பூவை உருவி கழுவி நெய்யுல் வதக்கி வைக்கவும். எண்ணெயில் கடுகு கருவேப்பிலை, சிறிது வெந்தயப்பொடி, பெருங்காய தூள் சேர்த்து இடித்த பூண்டு பச்சமிளகாய் கொத்துமல்லி சேர்த்து வதக்கி , கடைசியாக நெயில் வதக்கி வைத்துள்ள வேப்பம் பூவை சேர்த்து வதக்கி புளியை கரைத்து அதில் தக்காளி பிழிந்து விட்டு ரசம் பொடி சேர்த்து வைத்ததை ஊற்றி கொதி வரும் நிலையில் ரசத்தை இறக்கவும்
பாசிப்பருப்பு பாயாசம்
பாசி பருப்பு பாயாசம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விருப்பமான ஒரு ரெசிபியாகும். தங்கள் வீடுகளில் எதாவது சுப நிகழ்ச்சி என்றால் இந்த பாயாசம் செய்யாமல் இருக்க மாட்டார்கள். அதிலும் பாசிப்பருப்பு, தேங்காய் பால், மணக்க மணக்க நெய், வெல்லம், அலங்கரிக்க பருப்புகள் சேர்த்து கொஞ்சம் போது தித்திக்கும் சுவையுடன் அற்புதமாக வரும்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் பாசிப் பருப்பு
- 1 கப் பொடியாக்கப்பட்ட வெல்லம்
- 1 கப் தேங்காய் பால்
- 1 தேக்கரண்டி நெய்
- தேவையான அளவு உப்பு
- 1 துண்டு பொடியாக்கப்பட்ட ஏலக்காய்
- 10 slices இறுதியாக நறுக்கப்பட்ட தேங்காய்
- 4 கப் நீர்
- தேவையான அளவு பாதாம்
- தேவையான அளவு முந்திரி
- தேவையான அளவு கிஸ்மிஸ்
செய்முறை:
- கடாயில் பாசி பருப்பை போட்டு 3-4 நிமிடங்கள் வறுத்துக் கொள்ளுங்கள். பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளுங்கள்.
- கடாயில் நெய் ஊற்றி சூடானதும் பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு போட்டு பொன்னிறமாக வறுங்கள். பிறகு உலர்ந்த திராட்சை போட்டு 1 நிமிடங்கள் வரை வறுக்கவும்.
- பிறகு குக்கரில் வறுத்த வைத்த பாசிப்பருப்பை தட்டி அதில் நெய் ஊற்றி நன்றாக கிளறுங்கள். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்த பிறகு குக்கரின் மூடியை மூடி விடுங்கள்.
- 2 விசில் அடுக்கும் வரை வைக்கவும். பாசிப்பருப்பு நன்றாக வெந்தவுடன் இறக்கி விடுங்கள்.
- பொடிக்கப்பட்ட வெல்லத்தை சேருங்கள். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். 5-6 நிமிடங்கள் வரை சமைக்கவும். பிறகு தேங்காய் பால் சேர்த்து கொள்ளவும். வாசனைக்கு ஏலக்காய் தூள் சேருங்கள்.மிதமான தீயில் வைத்து வெல்லம் முழுவதுமாக கரைய வேண்டும்.
- இப்பொழுது அதனுடன் நட்ஸ்களை மேலே தூவி அலங்கரியுங்கள்.மணக்க மணக்க தித்திக்கும் பாயாசம் தயாராகி விட்டது.
இந்த புத்தாண்டு தினத்தை உங்கள் குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாட வாழ்த்துக்கள். உங்கள் வீட்டில் தலை வாழை இலை விருந்தை அனைவரும் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...