நவராத்திரி முதல், இரண்டாம் நாள் பிரசாத வகைகளும் நன்மைகளும்

நவராத்திரி விழா கொண்டாடுவதற்கு பின்னால உள்ள அறியவியல் நம்மை வியக்க வைக்கும். இந்த பண்டிகையானது பருவ நிலையில் இருந்து மற்றொரு ஒரு பருவ நிலை மாறும் காலத்தில் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவின்போது விரதம் இருப்பதால் அடுத்த பருவ நிலைக்கு மாற்றத்திற்கு ஏற்றபடி நமது உடல் நிலை மாறத் தயாராகிறது. நமது உடலின் கழிவுகள் அகற்றப்பட்டு உடல் ஆரோக்கியமாகிறது.
நவராத்திரியின் முதல் 3 நாள்கள் மலைமகளின் அம்சமான துர்கை அம்மனுக்கு உரியது. முதல் நாள் மகேஸ்வரி அம்மனை நினைத்துதான் நவராத்திரியைத் தொடங்க வேண்டும். வீட்டு வாசற்படியில் புள்ளி வைத்து, கம்பிக் கோலம் போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று
நவராத்திரியின் முதல் நாள் அரிசிமாவில் புள்ளி கோலமிட வேண்டும். இன்று மிருதங்கம் வாசிக்கத் தெரிந்தவர்கள் தோடி ராகம் இசைப்பது மிகவும் சிறந்தது. சாமுண்டி அம்பாளுக்கு ஏற்ற மல்லிகை, வில்வம் மலர் சூட்டி வழிபட வேண்டும். முதல்நாளில் அம்பிகையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து பூஜிக்க வேண்டும்.
நவராத்திரி முதல், இரண்டாம் நாள் சிறப்பு மற்றும் நெய்வேத்தியம்
நவராத்திரி முதல் நாள் அம்பிகைக்கு இந்நாளில் அம்பிகையை வணங்கினால் எதிரிகள், கடன் தொல்லைகள் நீங்கும். ஆயுளும் செல்வமும் விருத்தி அடையும். கொலு பார்க்க வரும் பக்தர்களுக்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும். வெண்பெங்கல், சுண்டல் நைவேத்தியம் செய்து கொலுவை பார்க்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம்.
நவராத்திரி முதல் நாள் நிறம்
குறிப்பாக முதல் நாளில் பச்சை நிறம் மிகவும் உகந்ததாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே, வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கும், கன்னிப் பெண்களுக்கும், பச்சை நிறத்தில் வளையல் அல்லது பச்சை நிற ரவிக்கை துணி இப்படிப்பட்ட பொருள்களை தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பது மேலும் சிறப்பினைத் தேடித்தரும். இதனோடு அம்மனுக்கு படைத்த வெண்பொங்கலையும் கொடுக்க வேண்டும்.
வீட்டுக்கு வருபவர்களுக்கு என்ன கொடுக்கலாம்
வளையல், ரவிக்கைத்துணி என்று எதையுமே தானமாக கொடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வீட்டில் வருபவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பூ, நெற்றியில் இட்டுக்கொள்ளக் குங்குமம் மட்டும் கொடுத்தால் கூடப்போதும். இந்த வகையில் முதல் நாள் வழிபாட்டை நிறைவாகச் செய்து முடித்தால், வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வறுமை இல்லாத, செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு வழி பிறக்கும்.
அனைத்து விதமான ஊட்டச்சத்துகளையும் தரும் நவராத்திரி உணவுகள்
நவராத்திரி திருவிழாவின் போது நாம் அதிகமாக சிறுதானிய உணவுகளையே சாப்பிடுகிறோம். முழு தானிய உணவுகளை புறக்கணித்துவிடுகிறோம். இந்த விழாவின் ஒன்பது நாளும் உணவு உணபதன் அளவு குறைந்து தியானம் மற்றும் பிரார்த்தனையில் கவனம் செலுத்துகிறோம். அவ்வாறே எடுக்கும் உணவும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கின்றது. இந்த முழு ஓய்வு மற்றும் புத்துணர்ச்சி செயல்பாடு, அடுத்த கட்ட பருவ நிலை மாற்றத்திற்கு நமது உடலைத் தயார்படுத்துகிறது.
இவை முக்கிய கனிமங்களான இரும்பு, ஜின்க் மற்றும் மக்னீசியம் போன்றவற்றின் மிகச் சிறந்த ஆதாரமாக விளங்குகின்றன. இந்த பொருட்களில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடெண்ட் மிக அதிகம் உள்ளது மற்றும் வழக்கமான தானியங்களை விட அதிக புரத சத்து உள்ளது.
நவராத்திரி முதல் மற்றும் இரண்டாம் நாள் பிரசாத வகைகள்
முதல் நாள் என்ன பிரசாதம் வைத்துப் படைக்க வேண்டும் என்பதையும் அதன் செய்முறையையும் இப்பொது பார்க்கலாம்...
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வெண் பொங்கல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்..
வெண் பொங்கல்
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி - ஒரு கப்
- பாசிப்பருப்பு - அரை கப்
- பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
- இஞ்சி - ஒரு துண்டு
- பச்சை மிளகாய் - 2
- முந்திரி - 10
- மிளகு - ஒரு டீஸ்பூன்
- சீரகம் - 2 டீஸ்பூன்
- நெய் - 5 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை
- உப்பு
செய்முறை:
- முதலில் பச்சரிசி, பாசிரிப்பருப்பு ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்யவும்.
- குக்கரில் 3 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு, பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் அரிசி, பருப்பு, உப்பு சேர்க்கவும்.
- ஒரு கப் அரிசிக்கு இரண்டு பங்கு அளவு தண்ணீர் சேர்த்து சுமார் 5 விசில்விட்டு வேகவிடவும்.
- அரிசி, பருப்பு வெந்ததும் சூடாக இருக்கும்போதே கரண்டியைக் கொண்டு நன்றாக குழைத்துக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும் முந்திரி போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
- இன்னும் சிறிது நெய் சேர்த்து, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து பொரிக்கவும்.
- பிறகு, இவற்றை பொங்கலில் சேர்த்து முழுமையாக கிளறவும்.
- இறுதியாக, நெய் சேர்க்கலாம்.
கமகமக்கும் வெண் பொங்கல் ரெடி..!
சுண்டல்
வெள்ளை கொண்டைக் கடலை சுண்டல் ஒரு ஆரோக்கியமான மற்றும் சத்தான மாலை சிற்றுண்டி. இந்த சண்டல் தயாரிக்க மிகவும் எளிதானது. இதற்கு குறைந்தபட்ச பொருட்கள் தேவை மற்றும் வீட்டிலேயே ஒரு நொடியில் தயாரிக்கலாம். நவராத்திரி விழாவின் போது தயாரிக்கப்படும் ஆரோக்கியமான புரதம்…
தேவையான பொருட்கள்:
- கொண்டைக் கடலை ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது- 1 கப்
- மஞ்சள் தூள். - 1 டீஸ்பூன்
- தேவைகேற்ப உப்பு
- தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
தாளிக்க:
- எண்ணெய். - 1 டீஸ்பூன்
- கடுகு. - 1/2 டீஸ்பூன்
- சிறிதளவு கரிவேபில்லை
- காய்ந்த மிளகாய்- 2
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கரிவேபில்லை போட்டு தாளிக்கவும்.
பிறகு, அதில் வேகவைத்த வெள்ளை கொண்ட கடலை, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும்..
இரண்டாம் நாள் சிறப்பு
அம்மனை முல்லை மலரால் அலங்கரித்து, துளசி இலையினால் அர்ச்சனை செய்ய வேண்டும். வாசமிக்க மருவு இலையையும் இணைத்துக் கொள்வது நல்லது.கோதுமை மாவினால், கட்டம் கோலம் போட வேண்டும். நிவேதனத்துக்கு, மாம்பழம் வைப்பது நல்லது. காலை, புளி சாதம் படைக்கலாம்; மாலை, தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல் செய்து, பிரசாதமாய் கொடுக்கலாம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும், நவ தானியங்களால் சுண்டல் செய்து கொடுத்து, நாமும் சாப்பிடுவது, அந்த பருவ காலத்தில், சீதோஷ்ண மாற்றத்தால் வரும் தோல் பிரச்னைகளை சரிசெய்வதற்கும் ஏற்றது என்பதை, ஆன்மிகத்தோடு, அறிவியலாகவும் தெரிந்து கொள்வோம். நம் சொந்த குழந்தையாக இல்லாமல், பிறர் வீட்டு குழந்தைகளை வரவழைத்து அலங்கரித்து, திருமூர்த்தியாக பாவிக்கலாம்.
- கோலம் - கோதுமை மாவு கட்டம்
- ராகம் - கல்யாணி
- மலர் - முல்லை
- பழம் - மாம்பழம்
- பிரசாதம். - புளியோதரை
இப்போது புளியோதரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
புளியோதரை தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
- உதிராக வடித்து ஆற வைத்த சாதம் - 2 கப்
- புளி - 100 கிராம்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- உப்பு, எண்ணெய் - 2 ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க :
- காய்ந்த மிளகாய் - 6
- கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பில்லை - சிறிது
- வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
வறுத்து பொடிக்க வேண்டியவை :
- தனியா - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு - 1/2 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 5
- கடலைப்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை :
- ஆற வைத்த சாதத்தை நல்லெண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.
- புளியை கெட்டியாக 1 கப் அளவுக்கு கரைத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து புளியை ஊற்றி கொதிக்க விடவும்.
- பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.
- புளி பச்சை வாசனை போய் திக்கான பதம் வந்து எண்ணெய் ஓரங்களில் பிரிய ஆரம்பித்ததும் பொடித்த பொடியில் 3/4 டேபிள்ஸ்பூன் தூவி 10 நிமிடம் கழித்து இறக்கவும்.
- புளிக்காய்ச்சல் ஆறியதும் சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
- 1 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் சுவையோ சுவை.
வேர்க்கடலை சுண்டல் - வேர்க்கடலை புரதச்சத்து நிறைந்த உணவு
தேவையான பொருட்கள்:
- பச்சை வேர்க்கடலை - 1 கப்
- தேங்காய் - தேவையான அளவு
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்ழுன்
- வரமிளகாய் - 4
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
- எண்ணெய் - அரை டீஸ்பூன்
செய்முறை:
- வேர்க்கடலையை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை கழுவிப் போட்டு, போதிய அளவு தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, மூடி 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்த பின்னர் வேக வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் உப்பு சேர்த்து கிளறி, துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு 2 நிமிடம் பிரட்டி இறக்கினால், சூப்பரான வேர்க்கடலை சுண்டல் ரெடி!!
(நவராத்திரி மூன்றாம், நான்காம் நாட்கள் - பிரசாத வகைகள் மற்றும் செய்முறை - http://www.parentune.com/parent-blog/third-and-fourth-days-of-navratri-types-of-offerings-and-recipe/6815)
நவராத்திரி முதல் நாளை சிறப்பாக கொண்டாட இந்தப் பதிவு உங்களுக்கு உதவும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்கள் பல பதிவுகளை கொடுக்க எங்களை ஊக்குவிக்கும். பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...