வாரா-வாரம்-கர்ப்பத்தின்-நிலை ...
கர்ப்ப கால மசக்கையை சமாளிக்க 10 வழிகள்

பொதுவாக கருவுறுதல் செய்தி என்பது வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயம். இந்த செய்தியை காதில் கேட்க மாட்டோமா என்று நினைப்பவர்களுக்கு பேரின்பம்பத்தை கொடுக்கும் நிகழ்வு, ஆனால் இதன் கூடவே கருவுற்ற பெண்ணுக்கு மசக்கை உண்டாகும். குமட்டல், வாந்தி, சோர்வு, அதிக உறக்கம், களைப்பு போன்ற அறிகுறிகள் உண்டாகும். இதை ஆங்கிலத்தில் morning sickness என்று சொல்வார்கள். பொதுவாக இந்த மசக்கை கர்ப்பம் தரித்த 4 முதல் 6 வாரங்களில் ஆரம்பிக்கும். சிலருக்கு 4 அல்லது 5 மாதங்களில் நின்றுவிடும். சிலருக்கு பிரசவ காலம் முழுவதும் இருக்கும். மகிழ்ச்சியும், அவஸ்த்தையும் கலந்த உணர்வு இது.
இது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அறிகுறிகளை கொடுக்கலாம். சிலருக்கு எதை சாப்பிட்டாலும் வாந்தி வரும், சிலருக்கு வராது. சிலருக்கு தாளிக்கும் எண்ணெய் வாசனை, இஞ்சி பூண்டு மற்றும் மசாலா வாசனை வந்தாலே வாந்தி வந்துவிடும். என்னுடைய கர்ப்ப காலத்தில் ப்ரஷ்ஷை வாயில் வைத்தாலே வாந்தி வந்துவிடும். எனக்கு பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால் அந்த நேரத்தில் எந்த பிரியாணி கடையை தாண்டி சென்றாலும் வாயையும், மூக்கையும் மூடிக் கொண்டு தான் செல்வேன். மசாலா வாசனை வந்தாலே குமட்ட ஆரம்பித்துவிடும். சாப்பிட ஆசையாக இருக்கும். ஆனால் மூன்று மாதம் முடியும் வரை வாசனை வந்தாலே குமட்டல் தான்.
காலை நோயை எவ்வாறு சமாளிப்பது?
இந்த மார்னிங் சிக்னஸை சமாளிக்க பல பேர் பல வழிகளில் ஆலோசனை சொன்னார்கள். இங்கே 10 வழிகளை உங்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன். இந்த வழிகள் உங்கள் வழிகளைத் தேர்வுசெய்ய உதவும்.
காலை வியாதியின் அறிகுறிகள்:
கர்ப்பம் தொடங்கிய காலத்தில் குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு, பசி குறைவது, அதிகமாக வாயில் எச்சில் ஊறுவது போன்ற அறிகுறிகள் ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்டிரோன், ஹெச்சிஜி(hCG) போன்ற ஹார்மோன்களின் அளவு அதிகமாவதால் உண்டாகிற எதிர்வினை. முதலில் கர்ப்ப காலத்தில் வரும் இந்த அறிகுறிகளை மனதளவில் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
காலை வியாதியில் என்ன சாப்பிடக்கூடாது
திட உணவாக சாப்பிட முடியவில்லை என்றால் சத்து மாவுக்கஞ்சி, கூழ், பழச்சாறு போன்ற வகையில் உட்கொள்ளலாம். பிஸ்கட், ப்ரெட் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
- காய்கறிகள், சாலட்கள், கீரைகள், நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாக சாப்பிடலாம். சத்து மாவுக்கஞ்சி, மாதுளை, பேரீச்சை, உலர் திராட்சை, கொண்டைக்கடலை, கேரட், பாதாம்பருப்பு, வேர்க்கடலை, நூக்கோல், இளநீர் ஆகியவை மசக்கையின்போது எடுத்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய உணவுகள்.
- வெறும் வயிற்றில் அதிக நேரம் இருப்பதையும், வயிறு முட்ட உண்பதையும் தவிர்க்கவும். ஒரு நாளில் 3 வேலை என்று தீர்மானிக்காமல் உணவை 6 வேலையாக எடுத்துக் கொள்ளலாம். அதே போல் எப்போது சாப்பிடும் பொழுதும் மெதுவாக சாப்பிடவும்.
- எண்ணெய், நெய் சேர்க்காத உணவுகள் மற்றும் காரம், மசாலா குறைந்த உணவுகளைச் சாப்பிடலாம். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகள் வேண்டாம்.
- சாப்பிட்டவுடனே படுக்கைக்கு செல்லாதீர்கள். செரிமானத்தில் பிரச்சனைகள் உண்டாகலாம். சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு படுக்கைக்கு செல்லுங்கள்.
- காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது மெதுவாக, நிதானமாக எழவும். அரக்க பரக்க அவசரமாக எழுந்திருப்பதை தவிர்க்கவும்.
- சாப்பிடுவதற்கு முன், சாப்பிடுவதற்கு பின் உடனே தண்ணீர் நிறைய அருந்த வேண்டாம். சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும் அரை மணி நேரம் இடைவேளையில் தண்ணீர் குடிக்கவும். உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் முழுவதும் தண்ணீர், நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.
- நீங்கள் சோர்வாக இருக்கும் போது குமட்டல் உண்டாகலாம். அடிக்கடி சிறிய நடைப்பயணம் செல்லலாம். வெளிக்காற்றை அவ்வப்போது சுவாசிப்பது நல்லது. சோர்வாக இருக்கும் பொழுது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
- பெப்பர் மிண்ட், இஞ்சி, எழுமிச்சை, பெரிய நெல்லிக்காய், ஆரஞ்சு போன்றவைகள் குமட்டலை கட்டுப்படுத்துவதாக சக கர்ப்பிணிகள் சொல்வதுண்டு. இஞ்சி டீ, பெப்பர் மிண்ட் டீ, இஞ்சி மற்றும் பெப்பர் மிண்ட் கேண்டி மிட்டாய்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
பெற்றோர் ஆலோசனை:
தொடர்ந்து இந்த மார்னிங் சிக்னஸ் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம். நீங்களாக சுய மருத்துவம் செய்யாதீர்கள். கர்ப்பிணிக்கும் குழந்தைக்கும் எந்தவித பாதிப்புகளையும் உண்டாக்காத மருந்துகளை மருத்துவர்கள் மட்டுமே கொடுக்க முடியும். கர்ப்ப காலத்தில் இது ஒரு பகுதி மட்டுமே சீக்கிரமே கடந்து போகும் இந்த பிரச்சனையை எண்ணி அதிக மன வருத்தம், பயம் கொள்ளாதீர்கள். இதை விட மிகப்பெரிய மகிழ்ச்சியே நம்முடைய குழந்தை தான். குழந்தையின் வளர்ச்சி குறித்த அழகான, இனிமையான உணர்வை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள். இனிமையான பிரசவ காலம் இயல்பாகவே நிகழும்...
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...